Tuesday 28 February 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 2

7. “நீயும் நானும் சேர்ந்தா ஜெயிக்கிற டீம்.”

தனிமை என்கிறது சிறு குழந்தைகளுக்கு மிகவும் கலக்கத்தை தருவது. அதனால நாம எப்பவும் கூடவே இருக்கோம் என்கிறதா அவங்க உண்ரும் படி நடந்துக்கணும். நேரடியா பார்க்க முடியாதப்பக்கூட அவங்க தனியா இல்லைன்னு சொல்லணும்.

8. தனக்குன்னு ஒரு கோஷம் இருக்கட்டும்: “ஜெய் ஹனுமான்!”; “ஜெய் ஸ்ரீராம்”; அல்லது “நா சூப்பர்மேன்!” இது போல ஏதாவது.

குழந்தைகளுக்கு இது தமாஷா கூட இருக்கும்! சினிமாக்களிலோ அல்லது டிவி சீரியல்களிலோ அந்த காலத்து போர் காட்சிகள்ன்னா அதுல படைகள் ஏதாவது கோஷம் போட்டுக்கொண்டே சண்டைக்கு ஓடுவாங்க. ஹர ஹர மஹா தேவ்! அடி கொல்லு! ரீதியில ஏதாவது கோஷம் இருக்கும். இந்த மாதிரி செய்யறது பயத்தால சுரக்கிற ரசாயனத்துக்கு பதில் எண்டார்பின்ஸ் ஐ சுரக்க வைக்கும். அது நல்லது! துணைக்கு யாரும் இல்லைன்னா என் பேரன் ஹனுமான் சாலீஸா சொல்லிக்கொண்டே டாய்லெட்டுக்கு போறான்.

9. “நீ அனுபவிக்கற கலக்கம் ஒரு ராட்சசன்னா அது பார்க்க எப்படி இருக்கும்?”

மனக்கலக்கத்துக்கு ஒரு உருவம் கொடுக்கறதால இனம் புரியாததுக்கு ஒரு உணரக்கூடிய தன்மை கிடைச்சுடும். கலக்க ராக்ஷசனோட அவங்களால பேச முடியும்!

10. “....க்காக காத்துண்டு இருக்கேன். அது வர வரைக்கும்....”

எதிர்காலத்தைப்பத்திய ஒரு பரபரப்பு ஒரு தொத்து வியாதி! அது கலக்கத்தை துரத்திட்டு அதோட இடத்தை பிடிச்சுண்டா நல்லது!

11. “உன் கவலையை இதோ இந்த டப்பால இறக்கி வெச்சுடலாம். உனக்கு பிடிச்ச பாட்டை கேட்டுட்டு/ விளையாட்டை விளையாடிட்டு/ கதையை படிச்சுட்டு அப்புறம் அத திருப்பி எடுத்து வெச்சுக்கலாம்.
மனக்கலக்கத்துக்கு அடிக்கடி ஆளாகிறவர்கள் பல சமயம் கலக்கத்தை ஏற்படுத்துகிற சமாசாரம் முடியற வரை அந்த கலக்கத்தை அனுபவிச்சுக்கொண்டே இருப்பாங்க. அதை தனக்கு பிடிச்ச விஷயத்துக்காக ஒதுக்கி வைக்க கத்துக்கலாம். அப்புறமா வந்து பார்க்கும் போது அதைப்பத்தி வேற கோணம் கிடைக்கலாம். அது நல்லது.

12. அடிக்கடி கேட்டு இருப்போமே? “இதுவும் கடந்து போகும்.” அது வரைக்கும் சௌகரியமா ரிலாக்ஸ்டா இருப்போம். இதையும் சேர்த்துக்கலாம்.

சௌகரியமா இருக்க முடிஞ்சா போதும். ரிலாக்சேஷனை அதுவே கொண்டு வந்துடும். மனக்கலக்கம் இறுக்கத்தை தரா மாதிரி ரிலாக்சேஷன் கலக்கத்தை மனக்கலக்கத்தை குறைக்கும். கொஞ்சம் கனமான போர்வை குழந்தைகளை சௌகரியமா வெச்சுக்கும்ன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. இதமா அழுத்தறதாலயா இருக்கலாம்.

-ொடும்

Monday 27 February 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 1


உணர்வு சார் நுண்ணறிவு பற்றி படிக்கும்/ யோசிக்கும் போது பெரியவர்களை திருத்த கஷ்டப்படுவதைவிட குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடலாம் என்று தோன்றும்.
ஆகவே...

https://goo.gl/IQgBbd

எல்லா குழந்தைகளுக்கும் ஏதோ ஒரு ரூபத்தில் இது இருக்கு! மனக்கலக்கம்! பெற்றோர்களாகிய நாம் இதிலிருந்து குழந்தைகளை மறைத்து காக்க விரும்பலாம். ஆனால் இதை கையாள கற்பது அவர்களுக்கு வரும் காலத்தில் இன்னும் நல்லதாக இருக்கும். அதனால பின் வரும் கேள்விகளை பொருந்தும் நேரங்களில் கேட்பதால அவர்கள் மனக்கலக்கத்தை அடையாளம் கண்டு ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுபடுதலை அவர்களே கற்பார்கள். இந்த எளிய கேள்விகளை பார்க்கலாமா?


1. “அதை வரைய முடியுமா?”
சில சமயம் குழந்தைகளால அவர்களோட மனக்கலக்கத்துக்கு காரணத்தை வார்த்தைகளில விவரிக்க முடியாது. அப்போ அவர்கள் தம் மனக்கலக்கத்துக்கு ஒரு வடிகாலா அதை ஏதோ ஒரு வகையில் வரைந்தா - அது கிறுக்கலா இருக்கலாம், கலர் பெய்ண்டிங்கா இருக்கலாம்- அது நல்லதா இருக்கும்.

2. “கண்ணா உன்னை எனக்கு ரொம்பபிடிக்கும். நீ என்கிட்ட பாதுகாப்பா இருக்கே!”
இப்படி சொல்லறது வலிமையானது .... குழந்தைகளை நேசிக்கும் ஒத்தர்கிட்ட அவங்க இருக்கறதா அவங்களுக்கு தோணறது அவர்களோட நரம்புகளை இதமா வருடிக்கொடுக்கும். மனக்கலக்கம் அடிக்கடி அவர்களோட மனசும் உடலும் பாதுகாப்பு இல்லாம இருக்கறதா அவர்களுக்கு உணர்த்தலாம்.

3. “நாம ரெண்டு பேரும் ஒரு பலூனை ஊதறதா நடிக்கலாமா? ஒரு பெரிய மூச்சை எடுத்துண்டு அஞ்சு எண்ணற வரைக்கும் நாம ரெண்டு பேரும் சேந்து பலூனை ஊதுவோம்.”

குழந்தை பீதி அடைஞ்சு இருக்கற நேரம் நல்லா மூச்சு எடுத்துவிடுன்னா “முடியலை!” ன்னு பதில் வரும். அதனால அதை ஒரு விளையாட்டா ஆக்கிடலாம். மூணு மூச்சு எடுத்து பலூனை ஊதும் போது ’பர்ர்ர்ர்ர்’ என்கிறது போல விசித்திரமான சத்தங்களையும் எழுப்பலாம். குழந்தையும் அதை இமிடேட் செய்து சிரிக்கும்! மன அழுத்தம் ஓடிப்போயிடும்!

4. “ நா சொல்றா மாதிரியே நீயும் சொல்லணும், சரியா?”
பின்னர் ‘என்னால இது செய்ய முடியும்!’ என்று பத்து முறை பத்து விதங்களில் குரலை உயர்த்தி, தாழ்த்தி, கீச்சுக்குரலில் என்று விதவிதமாக செய்யவும்.

5. “அது ஏன் அப்படி இருக்குன்னு சொல்லேன்?”

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பொருத்தமானது. ஏன் என்கிற ஆராய்ச்சி புத்தி பூர்வமானது. மனசை பின்னுக்கு தள்ளி புத்தி முன்னுக்கு வரும்போது உணர்வுகள் மழுங்கும். மேலும் ஏன் என்பதற்கு அவர்கள் விடையையும் கண்டு பிடித்துவிட்டால் மிகவும் நல்லது.

6. “அடுத்து என்ன நடக்கும்?”

மனக்கலக்கம் கிட்டப்பார்வையை உருவாக்கும். தற்போதைய/ அடுத்து வர நிகழ்வைத் தாண்டி யோசிக்க முடியாது. ஒரு நிகழ்வை பத்தி குழந்தைக்கு மனக்கலக்கம் இருந்தா, அதைத்தாண்டி அவர்களை யோசிக்க வைக்கிறது நல்லது. ‘இந்த ஆட்டத்தில் இப்ப தோத்து போயிடுவேன்; அதனால என்ன? அடுத்த முறை முயற்சி செஞ்சு ஜெயிக்கலாம்!” என்கிற ரீதியில் யோசிக்க ஆரம்பித்து விட்டால் நல்லது

- ொடும் 

Friday 17 February 2017

முடிவுரை - 2

முடிக்கும் முன்னே இந்த உசாநு நமக்கு என்ன செய்யப்போகிறதுன்னு சுருக்கமா பார்க்கலாமா?

1. ஒவ்வொரு நிகழ்வையும் தனித்துவமா இருக்கறதா பார்த்து அதுக்கு தகுந்தாப்போல செயல்படுவோம். டெம்ப்லேட் ரெஸ்பான்ஸ்ன்னு இல்லாம.

2. பொறுப்பு: நம் வாழ்க்கையை நம் பொறுப்புல எடுத்துப்போம். கர்மா தியரி சரியா புரியும். நாம் இது வரை செய்த செயல்களோட விளைவுதான் நம்மோட இப்போதைய நிலமைன்னு புரியும். அதனால ஏதும் தப்பா நடந்தா மத்தவங்களை குத்தம் சொல்ல மாட்டோம். அடுத்த முறை எப்படி வித்தியாசமா இன்னும் பொருத்தமா செய்யலாம்ன்னு யோசிப்போம்.

3. புத்தியைவிட தொலைநோக்குப்பார்வை இன்னும் முக்கியம்ன்னு புரியும். நம்மகிட்ட எல்லாத்துக்கும் விடை இராது. பிரச்சினையை சரியா புரிஞ்சு கொண்டு வழிகளை கற்பனை செய்வோம். தீர்வை கொண்டு வர பல வழிகளை தேடி அடைவோம்.

4. நாளைய சவால்களை எதிர்கொள்ள இன்னைக்கு தயார் செய்யணும்ன்னு புரியும். அதனால புதுசு புதுசா கத்துகிட்டே இருப்போம். வளர்ச்சி தொடர்ந்து இருக்கறதை உறுதி செய்வோம்.

5. எதையும் செய்ய பல வழிகள் இருக்கலாம்; நாம் செய்ததை விட வித்தியாசமா இருக்கலாம்; எப்பவுமே நாம் செய்ததைவிட இன்னும் சிறப்பா செய்ய வழி இருக்கலாம்ன்னு புரியும். அதனால மாற்றுக்கருத்துகள் வந்தா அசர மாட்டோம். அதை ஆராய்ஞ்சு அது இன்னும் நல்லதா தோணினா ஏத்துப்போம்.

6. மத்தவங்களோட கருத்தளவில ஒத்துப்போகலைன்னாலும் அவங்களை விமர்சனம் செய்யணும்ன்னு உந்துதல் இராது. விசித்திரமானதுதான் இந்த உலகம். மத்தவங்களுக்கு மாற்று கருத்து கொண்டிருக்கும் உரிமை உண்டுன்னு தெளிவா இருப்போம்.

7. எப்பவுமே எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடாது. ஏதேனும் பின்னடைவுகள் இருக்கலாம்; தோல்விகள் இருக்கலாம். மன வருத்தங்கள் ஏற்படலாம். நாம இதால் கொஞ்சம் வருந்தினாலும் நம் உணர்ச்சியை சரியானபடி வெளிப்படுத்திட்டு, இப்ப செய்யக்கூடிய. செய்ய வேண்டியதை செய்ய முனைந்து, அவற்றிலேந்து பாடங்கள் கத்துகிட்டு மேலே நகருவோம்.

8. 100% நேரம் சாந்தமாவே இருக்கறது அரிதுதான். இருந்தாலும் பெரும்பாலான நேரம் சாந்தமாவே இருப்போம். அது இயலும்.

9. நமக்கு வீண் கற்பனைகள் இல்லை. வெற்றிக்கு பொறுமையும் முயற்சியும் தேவைன்னு தெரியும். இருந்தாலும் எல்லம் நல்லா நடக்கும்ன்னு ஒரு நேர்முறை எண்ணத்தோட செயலாற்றுவோம். வாழ்க்கை நம் பக்கம் வீசி எரியற எதையும் தைரியமா எதிர்கொள்ளுவோம். தேடினா வாய்ப்புகள் எப்படியும் கிடைக்கும்ன்னு நம்பிக்கையுடன் இருப்போம்.

10. நாம் பலருடன் இசைவோட இருப்போம். மத்தவங்க நம்மோட இசைவுடன் இருக்க பிரியப்படுவாங்க; அது சுலபமாகவும் இருக்கும். நல்ல உறவுகள் ரொம்ப மெனக்கெடாமலே தானே நிகழும்.

11. மத்தவங்க நம்மை பாராட்டி புகழும்போது அதை சந்தோஷமா ஏத்துப்போம். இருந்தாலும் நம்மை சிலர் வெறுத்தாலும் நாம செய்யறது சரி என்கிற நம்பிக்கை, துணிச்சல் நமக்கு இருக்கும். அவங்க என்ன நினைப்பாங்கன்னு கவலைப்படாம சரின்னு நமக்கு பட்டதை செய்து கொண்டு போவோம்.

12. எப்பவும் மகிழ்ச்சியாவே இருப்போம். மத்தவங்களோட சிரிச்சு ஜோக் அடிச்சு மகிழ்ந்து…. அந்த ஜோக் நம்மைப்பத்தியதாவே இருந்தாக்கூட!


வாழ்த்துகள்!

Thursday 16 February 2017

முடிவுரை - 1

முடிவுரை:
இந்த உணர்வு சார் நுண்ணறிவு நம் வாழ்கையையே புரட்டிப்போடக்கூடியது. இது மட்டுமே போதும் என்று இல்லை. ஆனால் நாம் நம் வாழ்க்கையை இன்னும் திறம்பட நடத்த இது பேருதவியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
ஒரு சூ மந்த்ராகாளி போட்டு வாழ்க்கையை இது மாற்றிவிடாது. நாம் இதுக்கு நிறையவே உழைக்கணும். ஆனால் இதன் விழிப்புணர்வே நம் வாழ்க்கையை பெருமளவு மாற்றிவிடும். மீதிக்கு உழைத்தே சாதிக்க வேணும். நாம் மாறுவதால் இதை பார்த்து உணர்ந்து மற்றவர்களும் மாறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதில் இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. உணர்ச்சி மனசை ஹைஜாக் செய்துவிடாமல் புத்தி நிலைக்கு மாற்றிவிடலாம்தான். ஆனால் அப்புறம்? புத்தி எப்படி வேலை செய்யப்போகிறது?
ஒருவர் நம்மை கண்டபடிக்கு திட்டுகிறார். நாம் உசாநு வை பயன்படுத்தி திருப்பி திட்டாமல் அடிக்காமல் இருக்கிறோம். ஆனால் என்ன செய்யப்போகிறோம்? போகட்டும்ன்னு விட்டுவிடுவோமா? இல்லை திட்டம் போட்டு ஆசாமியை கவிழ்ப்போமா? வேற கெடுதல் செய்வோமா? உண்மையில் இதுதான் நம்மை யார் என்று காட்டப்போகிறது! இதுக்கு எமோஷனல் மெசூரிடி என்கிறார்கள்.
உசாநுவே எல்லாம்ன்னு இல்லை. அது பிரச்சினையை அடையாளம் காட்ட உதவும். எப்படி கையாளுவது என்கிறது புத்தியோட வேலை. அதுதான் ஆராயணும். இங்க ஆளாளுக்கு ஒரு லிமிடேஷன் இருக்கும். ஆனா சுய விழிப்புணர்வு ‘டேய், இதுக்கு நம் அறிவுக்கெட்டிய தீர்வு இல்லை. யாரானா நிபுணரை கேட்கலாம். அதுல அவமானம் ஒண்ணும் இல்லை!” ந்னு சொல்வதால வேற உதவியையும் நாடுவோம். எப்படியும் சில தேர்வுகள் இருக்கும். அதில எதை தேர்ந்தெடுப்போம் என்கிறதுதான் நம்மை 'டிஃபைன்’ செய்யும்! அடையாளம் காட்டும்!
இங்கேதான் மூணாவது காரணியான பர்சனாலிட்டியும் வேலை செய்யும்! இதை மாத்திக்க முடியாதுன்னு ஆரம்பத்திலேயே பார்த்தோம், இல்லையா?

முதலில் உணர்வு சார் நுண்ணறிவை அடைவோம். மேலும் பல விஷயங்களை நாமே கண்டுபிடிக்கலாம். இது வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு துறை. உத்திகளோ, பயிற்சிகளோ நிறைய புதுசாக கண்டுபிடிக்கவும், பரப்பவும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்த பதிவுடன் நிறைவுறும்! அப்பாடா!

Wednesday 15 February 2017

17. சிக்கலான உரையாடலை சமாளிக்க…

17. சிக்கலான உரையாடலை சமாளிக்க….
பதவி உயர்வுக்கு ஏன் என்னை புறக்கணிச்சீங்க?”
உங்களுக்கு அடுத்த படியா பதவில இருக்கறவர் பதவி ஓய்வு பெறப்போறார். அந்த இடத்துக்கு யாரை தேர்ந்தெடுக்கறது? அடுத்து இருக்கறவங்கள்ல இரண்டு பேர் வரலாம்.
ஒண்ணு மாலதி. இரண்டு சுசித்ரா.
காலியாகப்போற பதவிக்கு உங்க தேர்வு சுசித்ரா. இந்த தேர்வுக்கு சிலரை கூப்பிட்டு கலந்தாலோசிச்சோம். நாம அதிகார பூர்வமா அறிவிக்கும் முன்னே, சுசித்ரா, மாலதிகிட்ட பேசும் முன்னே யாரோ விஷயத்தை கசியவிட்டாங்க போலிருக்கு. இப்ப மாலதி கண்ணை கசக்கிகிட்டு வந்து நிக்கறாங்க. குரல்ல ஒரு சின்ன நடுக்கம். மனசு புண் பட்டா மாதிரி ஒரு பாவனை.

மாலதி நல்லா வேலை செய்யறவர்தான். ஆனா பதவி உயர்வுக்கு இன்னும் தயார் ஆகலை. இதை அவங்ககிட்ட சொல்லறதுதான் இப்ப பிரச்சினை. இதால ஏற்படும் விளைவை அப்புறம் பாத்துக்கலாம். இப்ப நாம பங்கெடுக்க வேண்டிய உரையாடல் சிக்கலா இருக்கப்போறது! இந்த சிக்கலான உரையாடல்கள் எல்லாம் எப்போதாவது வரத்தான் வரும். அதை எல்லாம் அமைதியா திறமையோட கையாள முடியும், முடியணும். இவற்றை எதிர்கொள்ளாம விட்டுட்டு ஓடிப்போக முடியாது. உசாநு இருந்தா இதெல்லாம் வராம இருக்குமோ? இல்லை; வரும். ஆனா தைரியமா திறமையோட உறவை பாதிக்காம எதிர் கொள்ள முடியும்.

செய்ய வேண்டிய சிலதை பார்க்கலாமா?
1, ஏதேனும் ஒத்துப்போகிற விஷயத்தோட ஆரம்பிங்க.
நம்ம உரையாடல் கருத்து வித்தியாசத்தோடத்தான் முடியப்போறதுன்னு தெரிஞ்சா, உரையாடலை நாம் ஒத்துப்போகிற விஷயத்தோட ஆரம்பிங்க. அது இப்ப உக்காந்து விவாதிக்கலாம் என்கிறதாக்கூட இருக்கலாம். அல்லது பொதுவான ஒரு இலக்கு. உதாரணமா, “மாலதி, உங்க திறமையை நான் மதிக்கிறேன் என்கிறதை முதல்ல சொல்லிடறேன். விஷயத்தை நானே உங்ககிட்ட சொல்லும் முன்னேயே யாரோ சொல்லிட்டது துரத்ருஷ்டம். போகட்டும்; இந்த சமயத்தில இதைப்பத்தி உங்களுக்கு தெளிவு படித்திடலாம்ன்னு தோணறது. இதுல உங்க கருத்துக்களையும் கேட்க எனக்கு விருப்பம்.”

2. அவங்களோட தரப்பை புரிஞ்சுக்க உதவி செய்யும்படி கேளுங்க.
முடிவு வேற மாதிரி போனது கூட பலருக்கும் கஷ்டமா இருக்காது. யாரான தன் தரப்ப, குறையை கேட்கணும்ன்னு தோணும். அதை காது கொடுத்து கேட்டுட்டாக்கூட போதும் சிலர் சமாதானமாகிடுவாங்க. கேட்க ரெடி இல்லைன்னா அவங்களோட விரக்தி இன்னும் அதிகமாயிடும். அதுக்கு முன்னே நாம முந்திண்டு கேட்க ரெடியா உங்க தரப்பை சொல்லுங்க என்கறது நல்லது. நாம நம்மோட உணர்ச்சிகளை சரிப்பண்ணிக்கலாம் ஆனா இப்ப கவனம் மத்தவங்களை புரிஞ்சுக்கறதுல இருக்கணும். “மாலதி, பேச்சு முடியறதுக்குள்ள உங்க பார்வை எனக்குப்புரியணும்ன்னு ஆசைப்படறேன். அதுக்கு நீங்க மனம் திறந்து பேசணும்.” ந்னு சொன்னா நாம அவங்களைப்பத்தி அக்கறை காட்டறோம்; அவங்களைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்க விரும்பறோம்ன்னு அவங்களுக்கு புரியும். இதனால் உறவு மேம்படும்.

3. திருப்பித்தாக்க தோணும் அந்த எண்ணத்தை ஒழிங்க!
காது கொடுத்து கேட்கிறது என்கிறது உள்ளே வர விஷயத்துக்கான செயல். பேச்சு என்கிறது வெளியே போகிறதுக்கான செயல். இரண்டும் ஒரே சமயத்தில் சரியா நடக்காது. அதனால உடனடியா சாட்டையடி பதில் கொடுக்கத்தோணினாலும், கொஞ்சம் அதை அடக்கிட்டு காது கொடுத்து கேட்கற காரியத்தை பாருங்க! இப்ப மாலதி எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பதவி உயர்வு கைதட்டிப்போய் அதப்பத்தி வேற யாரோ சொல்லக்கேட்டு நொந்து போயிருக்காங்க. உறவுகள் தொடர்ந்து நல்லபடியா இருக்கணும்ன்னா இப்ப நாம நிதானமா இருந்துகிட்டு அவங்க சொல்லறதை கேட்டுக்கணும். அவங்களோட ஏமாற்றம் / அதிர்ச்சியை புரிஞ்சுக்கணும். நம்மை நாமே தற்காத்துக்கறதோ அல்லது ‘அதெப்படி ந்யூஸ் போச்சு? யார் லீக் பண்ணாங்க?’ ந்னு பொங்கறதோ இப்போதைக்கு வேணாம்.

4. மத்தவங்க நம்மை புரிஞ்சுக்க உதவி செய்யுங்க!
பூடகமா சொல்லவோ, சுத்தி வளைச்சு ஜாங்க்ரி பிழியறதோ வேணாம். நேரடியா தெளிவா இந்த தேர்வு விஷயத்தில உங்க எண்ண ஓட்டம் எப்படி இருந்தது, ஏன் என்கிறதை சொல்லிடலாம். ஏன் தான் தேர்வு செய்யப்படலை என்கறதை தெரிஞ்சுக்கறது அவங்களுக்கும் நல்லது. குறைகளை நிவர்த்தி செய்துக்கலாம், இல்லையா? இன்ன சூழ்நிலை இருக்கறதால, அடுத்து வரவருக்கு இந்த காலகட்டத்தில இன்ன இன்ன திறமை இருக்கணும் என்கிறதால மத்த திறமை இருந்தாலும் இப்போதைக்கு இவர் தேர்வாகலை என்கிறதை தெளிவா நிதானமா உறுதியா கொஞ்சம் ஆதுரத்தோட சொல்லிட்டா விஷயம் முடிஞ்சது. இப்படி சொல்ல முடியறதுதான் நமக்கு இங்கே தேவையான திறமை!

5. அவரவர் நிலையை சரியா தெளிவு படுத்திய பிறகு ஒத்தரோட இன்னொருத்தர் ஒத்துப்போகணும்ன்னு ஒண்ணுமில்லே. இருந்தாலும் உரையாடல் மேலே நகரணும். இதுக்கு யாரானா ஒத்தர் முயற்சிக்கணும். இந்த உதாரணத்தில நாமதான் அதை செய்யணும். நம்ம நிலை அவங்களுக்கு புரிஞ்சதும், அவங்க நிலையை நாம சரியா புரிஞ்சு கொண்டதும் உரையாடல்ல ஒண்ணும் முன்னேற்றம் ஏற்படாதுன்னு தெரிஞ்ச பிறகு அதை சரியா முடிச்சு வைக்கணும். எப்படியும் நாம்தான் முடிவெடுக்க வேண்டிய நபர்; முடிவு எடுத்தாச்சு. அது மாலதிக்கு உவப்பா இல்லைதான். ஆனா நாம அதுக்கு எதுவும் செய்ய முடியாது. இப்படி சொல்லலாம்: “நீங்க நேரடியா என்கிட்ட வந்து கேட்டதே நல்லது. இப்ப உங்க நிலைப்பாட்டை நான் புரிஞ்சுகிட்டேன். என் நிலைப்பாடு உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கறேன். உங்க முன்னேற்றத்தில எனக்கு இன்னும் ஆர்வம் இருக்கு. அடுத்து வரும் பதவி உயர்வுக்கான திறமைகளை வளர்க்க என்னால முடிஞ்ச உதவிகளை செய்யறேன். என்ன நினைக்கிறீங்க?”

6. தொடரவும்: இந்த மாதிரி சிக்கலான கசப்பான ஆனா முக்கியமான உரையாடல்கள் முடிஞ்ச பிறகும் கொஞ்சம் பின் தொடர வேண்டிய தேவை இருக்கு. கசப்பு அவ்ளோ சீக்கிரம் மறைஞ்சு போகாது. அவங்க எப்படி நடந்துக்கறாங்க, இதனால என்ன பாதிப்புன்னு தொடர்ந்து கவனிக்கணும். உறவு என்பது இரண்டு தரப்பை சார்ந்தது என்கிறதால நம்ம தரப்பை சரியா ஸ்மூத்தா வெச்சுக்கலாம். அவ்வப்போ அவங்களை சந்திச்சு அவங்க திறமைகள் வளர உதவினா நாம நிஜமாகவே அவங்க முன்னேறதுல ஆர்வம் காட்டறோம்ன்னு நம்புவாங்க.


ஒரு வேளை எதுவும் சரியா நடக்கலேன்னா போகட்டும். நாம் தீர்மானித்தபடி மேலே நகர வேண்டியதுதான். நம்மால முடிஞ்சதை செஞ்சாச்சு. அந்த வேலையை கவனிக்க சரியான நபரை தேர்ந்தெடுத்து வேலைய நடத்த வேண்டிய பொறுப்பு நம்மோடது. இதை சரியா அவங்க புரிஞ்சுக்கலைன்னா ஒண்ணும் செய்ய முடியாது. கட் அன் ட்ரையா இப்படி இருக்கறதால சில சமயம் ஆச்சரியமா உறவு வலுப்படக்கூட செய்யும்!

Tuesday 14 February 2017

16. முறியும் பேச்சு வார்த்தையை சரி செய்ய...

16. முறியும் பேச்சு வார்த்தையை சரி செய்ய...

இப்பல்லாம் விமானங்கள் காத்தில ஓடாம காத்தோடிகிட்டு இருக்கும் போல இருக்கு! சில நாடுகளில சர்வ சாதாரணமா மக்கள் விமானங்களில் பறக்கறதால எப்பவும் பிரச்சினை இருக்கும். தொழில் போட்டி இருக்கறதால டிக்கட் வாங்கிட்டு அதை கடைசி நாள் ரத்து செய்யவும் செய்வாங்க. இதை எதிர்பார்த்து புள்ளிவிவரத்தை பாத்து இவ்வளோ சதவீதம் கான்சல் ஆகறதுன்னு சொல்லி அவ்வளோ அதிகமாவும் டிக்கெட் வித்துடுவாங்க. சரி, ஒரு வேளை அவ்வளோ கான்சலேஷன் வரலைன்னா?

இதுக்குன்னு இருக்கற பலியாடு ஏர்லைன் ஏஜெண்ட். இவரேதான் விமானம் பனி மூட்டத்தால் தாமதமா வருது; எஞ்சின் கோளாறால தாமதமா கிளம்பும் மாதிரி அசுப செய்திகளை எல்லாம் சொல்லவும் வேண்டியவர்! இப்படி செய்தி கேட்டதும் பத்து பேராவது போய் அவரை திட்டுவாங்க! “எனக்கு என்ன அவசரம் தெரியுமா? நீங்க பாட்டுக்கு அசால்டா இப்படி லேட்டாகும்ன்னு சொல்லறீங்க?” இவங்களை எல்லாம் சமாதானப்படுத்தி வேற புக்கிங், விலை குறைப்பு, இலவச ஓய்வறை, இலவச உணவு ந்னு எதையாவது செஞ்சு ஜனங்களை சமாதானப்படுத்தறதே இவரது தினசரி பொழைப்பு! பாவமா இருக்கில்லே?!

இந்த சமாதானப்படுத்தறது என்கிறது நம்ம தினசரி வாழ்க்கையில் கூட அடிக்கடி வரும். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கும். திடீர்ன்னு சந்திராஷ்டமம் மாதிரி போறாத காலம் வந்தாச்சுன்னா கணவன் டிபனை குறை சொல்ல ஆரம்பிப்பார்!
என்னடி இது?
என்ன எது?
உப்புமாவில உப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கே?
அது உப்புமாதானே? உப்பு இருக்கத்தான் இருக்கும்!
கிண்டலா? உங்க அம்மா மாதிரியே பேசறியே!
என்ன என்ன? எங்க அம்மாவை இழுத்தாறது? நாங்க ஒண்ணும் சோத்துக்கு லாட்டரி அடிச்ச கும்பல் இல்லே!
அப்ப எங்க குடும்பம் சோத்துக்கு லாட்டரி அடிச்சதா சொல்லறியா?
நா ஏன் சொல்லணும்? அதான் சந்தியா சிரிச்சதே! போனாப்போறதுன்னு உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்.
அவ்ளோதான்! உப்பு கொஞ்சம் தூக்கல்ல ஆரம்பிச்சது கதை எங்கெங்கேயோ போகும்! பழைய உரசல்கள் திருப்பி மேலெழும். பழைய ரணங்கள் கிளரப்படும். அது வரை செஞ்ச சின்ன சின்ன தப்புகள் எல்லாம் பூதாகாரமா சித்தரிக்கப்படும். எல்லாம் சுத்தி சுத்தி வட்டத்தில திரும்ப வரும்! சாதாரணமா சொல்லில வராததெல்லாம் வரும். ஒத்தரை ஒத்தர் குறை சொல்லிக்கொண்டு…

இதுல யார் ரைட் யார் தப்பு; யார் இதை ஆரம்பிச்சது என்கிறதெல்லாம் விஷயம் இல்லை. யாரோ ஒத்தர் விட்டுக்கொடுக்கணும். சட்டுன்னு நிலமையை புரிஞ்சு கொண்டு இந்த ‘உரையாடலை’ ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்; அல்லது திசை திருப்பணும். தப்பு நம்ம மேல இல்லைன்னாலும் நமக்கு இப்ப வேண்டியது தீர்வா இல்லை யார் சரி என்கிற ஜட்ஜ்மெண்டா?
இப்ப எரிகிற நெருப்புல தண்ணியை ஊத்தி அணைக்கணும், அதுக்கு ஏதேனும் சொல்லணும். அது ‘சரி, விடு!’ என்கிற எளிசான வார்த்தைகளில் இருந்து ஆரம்பிச்சு விவரமான வேற ஏதாவும் இருக்கலாம்.

நம்மோட சுய விழிப்புணர்வால “என்னய்யாது? இந்த பிரச்சினை ஆரம்பிச்சதுல என் பங்கு என்ன? இப்ப என்ன செஞ்சு இதை வளத்துகிட்டு இருக்கேன்? ” ன்னு யோசிக்கணும். சுய மேலாண்மை சரியா இருந்தாத்தான் நம்மோட வழக்கமான கிண்டல் பதில்களை ஒதுக்கி வெச்சுட்டு சமாதான வழிக்கு போவோம். சமூக விழிப்புணர்வு மத்தவங்களோட உணர்வுகள் என்ன? இப்ப எதை வெளிப்படுத்தி இருக்காங்க; என்ன செஞ்சா இப்ப இதை முடிவுக்கு கொண்டு வரலாம்ன்னு சொல்லும். இரண்டு பக்கத்தையும் பார்த்தாத்தான் ஏன் எங்கே உரையாடல் திசை திரும்பித்துன்னு புரியும். அதே சமயம் என்ன மாதிரி எவ்வளோ தண்ணியை நெருப்பில ஊத்தணும்ன்னு புரியும். எல்லாமே அவசியம்.

ரொம்ப வருஷங்களுக்கு முன்னே எங்க நகர் பகுதி மக்களோட கூடுதல் நடந்தது. ஓரிரண்டு வருஷங்கள் உருப்படியா நடந்தது. ஒரு மீட்டிங் போது நகர் பகுதி தெரு ரொம்ப மோசமா இருக்குன்னும் அதுக்கு ஏதாவது செய்யணும்ன்னும் பேச்சு வந்தது. ஆரம்ப உற்சாகமா? நேரா கமிஷ்னரை இப்ப போய் பார்க்கலாம்ன்னு கிளம்பிட்டோம். அவரோட வீடு பக்கத்துலதான் என்கிறதால் ஒரு கும்பலே கிளம்பிடுத்து. எல்லாரும் போய் அவர் வீடு எதிரே நின்னோம். வெளியே இருந்த ஆள்கிட்ட **** நகர வாசிகள் வந்திருக்கோம்; கொஞ்சம் பேசணும்ன்னு சொல்லி அனுப்பினோம். அவரும் உள்ளே வரச்சொன்னார். ஆரம்பத்தில எல்லா சுமுகமாத்தான் போச்சு. ஆனா அவரோட பதில்களில யாருக்கும் திருப்தி இல்லை. அப்படி பார்க்கலாம்ன்னு சொல்லி இருந்தாக்கூட அப்போதைக்கு முடிஞ்சிருக்கும்.
ரோடா? இப்பத்தானே போட்டது?
ஆமாம். அவ்ளோ மோசமா போட்டு இருக்காங்க.
ஊர் முழுக்க எல்லா ரோடும் அப்படித்தான் இருக்கும். ஒண்ணும் பண்ண முடியாது. இப்போதைக்கு ரோடு போட பணம் சாங்க்‌ஷன் இல்லே!
நாங்க எவ்ளோ நாளா கேட்டுக்கிட்டு இருக்கோம். *** இடத்தில் போய் ரோடு போட்டு இருக்கீங்க? எங்க ஏரியாவில போடலை! - இப்படி ஒரு இளைஞர் சூடா ஆரம்பிக்க அவர் பொறுமையும் போயிடுத்து.
ஏன்? அங்க ரோடு போடறப்ப நீங்க எல்லாரும் வந்து மறிக்க வேண்டியதுதானே?

சீக்கிரமே உரையாடல் சரியான திசையில் போகலைன்னு புரிஞ்சு கொண்டு நாங்க எழுந்துட்டோம். எல்லாரும் வெளியே போகும் போது ஒரு கம்பனி ஆசாமி அவர்கிட்ட “எல்லாருக்கும் அவரவர் பிரச்சினைகள் நிறைய இருக்கு. உங்களுக்கும்; எங்களுக்கும்! இன்னொரு முறை சந்திச்சு இது பத்தி பேசலாம்!” ந்னு சொல்லி கைகுலுக்கிட்டு கிளம்பினார்!
எனக்கு ஆச்சரியமா இருந்தது. வெளியே வந்த பிறகு அவர்கிட்ட விசாரிச்சேன். அவர் சொன்னார் “ அவர் ஏடா கூடமா பேச ஆரம்பிச்சுட்டார். சரிதான். அவருக்கு அரசியல்வாதி ப்ரெஷர்; வேற இடத்துல ரோடு போட்டுட்டார். அது முடிஞ்சு போயாச்சு. இப்ப பேச்சு வார்த்தை தோல்விதான். ஆனா எதிர்காலத்தில இதை திருப்பி பேச ஒரு வாய்ப்பை வைத்துக்கொண்டுதான் நாம மீட்டிங்க்லேந்து எழுந்துக்கணும். அதான் மேனேஜ்மெண்ட்!”
இதான் எரிகிற நெருப்புல எண்னையை ஊத்தாம தண்ணியை ஊத்தறது என்கறது!
இது இரண்டு தரப்புக்கும் ஏதோ ஒரு பொதுவானதை முன்னிருத்தி முடியணும். சொல்கிறதுல எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்கக்கூடாது. கோப தாபங்கள் அறவே கூடாது!
இப்படி செய்யும்போது நமக்கு பாதகமா விஷயங்கள் போகிறபோது கூட பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு திறந்தே இருக்கும். விஷயம் ரொம்ப சீரியஸா போய் சரி செய்ய முடியாத அளவு முறிவு ஏற்படும் முன்னே சரி செய்ய செயல் ஆற்றணும். பயிற்சியும் விழிப்புணர்வும் இதை வெற்றிகரமா ஆக்கும்.


Monday 13 February 2017

15. நீங்க ஏற்படுத்துகிற தாக்கம் உங்க நோக்கத்துக்கு பொருத்தமானதா?

15. நீங்க ஏற்படுத்துகிற தாக்கம் உங்க நோக்கத்துக்கு பொருத்தமானதா?

கம்பனி மீட்டிங்கல இருக்கோம். அடுத்ததா விவாதிக்க வேண்டியது என்னன்னா ஏன் சில வேலைகள் கால தாமதமா நடக்குதுன்னு கண்டு பிடிக்க வேண்டியது. அது சம்பந்தமா சிலர் சிலதை பேசின பிறகு என்ன விஷயம்ன்னு புரியறது. வேலை சம்பந்தப்பட்ட ஒருத்தர்தான் நேரத்துக்கு தன் பங்கை முடிக்காம இருக்கார். எல்லாரும் இப்ப செம டென்ஷன்ல இருக்காங்க. எல்லாரையும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வைக்கலாம்ன்னு “சித்ரா, உங்க மைக்ரேந்தான் குற்றவாளி போலிருக்கு!” ந்னு சொல்லறீங்க. ஆனா யாரும் சிரிக்கலை. சித்ரா அழுதுகிட்டே வெளியே போயிடறாங்க! அட! நாம் எதிர்பார்த்தது இது இல்லையே! நான் ஜோக்காத்தான் சொன்னேன் என்கறீங்க! ஆனா சேதம் நடந்துமுடிஞ்சாச்சு! உங்க நோக்கம் சரிதான். ஆனா தாக்கம் வேறயா போயிடுத்தே! யார் இந்த நேரத்துல எப்படி எடுத்துப்பாங்கன்னு சரியா கணிக்கலை!

அதே போல எப்பவும் ரிசல்ட் ரிசல்ட்ன்னு ஜபிச்சுகிட்டே வேலை பாக்கிற, வேலை வாங்குகிற மேனேஜர் இருக்கலாம். இன்னும் இன்னும் அதிக ரிசல்ட் என்கிறதே இவங்களோட குறிக்கோளா இருக்கும். எல்லாம் இவங்க சொல்ற படியே செய்யணும். ஏன் எதுக்குன்னு கேக்காதே! சொல்லறதை செய்! அப்படி செய்யறதுதான் நல்ல ரிசல்டை தரும்ன்னு தீவிரமா நம்பறாங்க. கொஞ்ச நாள் கழிச்சு பாத்தா எல்லாரும் இவங்க மேல செம கடுப்புல இருப்பாங்க.

இவங்க நினைச்சது தான் பல வருஷமா கண்டு பிடிச்ச வழில வேலை செஞ்சு இதான் சுலபம்ன்னு எல்லாரும் கத்துக்கட்டுமே என்கிறது. மத்தவங்களுக்கோ ஒண்ணுமே சொல்லாம இப்படித்தான் செய்யணும்ன்னு துன்புறுத்தலாமான்னு தோணும்.

நிறைய மாமியார் மாட்டுப்பெண் சண்டை இப்படித்தான் ஆரம்பிக்கும். இப்பல்லாம் எல்லாரும் தனித்தனிக்குடும்பமா போயிடறதால அதிகமா இந்த பிரச்சினையை பார்க்க முடியறதில்லைமாமியார் தன்னோட நீண்ட அனுபவத்தில இப்படி இப்படி செய்யறதுதான் சரின்னு கண்டு பிடிச்சிருப்பாங்க. அது வேலையை இன்னும் சுளுவா ஆக்கறதோ, சீக்கிரம் முடிக்கறதோ அல்லது பாதுகாப்பானதோ ஏதோ ஒரு காரணம் இருக்கும். சில சமயம் அந்த காரணம் அவங்களுக்கே தெரியுமான்னு கூட சொல்ல முடியாது. மாட்டுப்பெண் மாடர்ன். அவங்க ஒண்ணு அந்த வேலையையே செஞ்சு இருக்க மாட்டாங்க. அல்லது இப்ப செய்ன்னு சொன்னா எப்படி செய்யறதுன்னு அவங்களுக்கே ஒரு கற்பனை இருக்கும்! மாமியார் இப்படித்தான் செய்யணும்ன்னு சொன்னா ‘நீ என்ன எனக்கு சொல்லறது?” ந்னு ஒரு ஈகோ பிரச்சினை ஆரம்பிக்கும்

இந்த நோக்கம் - தாக்கம் பொருத்தம் சரியா வரதுக்கு சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை, சமூக விழிப்புணர்வு எல்லாம் அவசியம்ன்னு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எதையும் சொல்லும் முன்னே கொஞ்சமே கொஞ்ச நேரம் எடுத்துண்டு நாம் என்ன சொல்லப்போறோம், அதோட தாக்கம் என்னவா இருக்கும்ன்னு ஒரு அவசர ஆலோசனை செஞ்சா போதும்!

அடிக்கடி இந்த தப்பை செஞ்சு மாட்டிக்கிற ஆசாமியா நீங்க? ரைட்! ஒரு காகிதத்தை எடுங்க. எழுத ஆரம்பியுங்க. என்ன நடந்தது, உங்க நோக்கம் என்ன. உங்க செயல் என்ன, தாக்கம் என்ன? தாக்கம் என்கிறது மத்தவங்க அதை எப்படி எடுத்துக்கிட்டாங்க என்பது.
அடுத்து நிலமையில் உங்களுக்கு என்ன புரியலை? இப்படி சேதம் ஏற்பட்ட பிறகு புரியறது என்ன? எதை சரியா கவனிக்காம விட்டுட்டோம். (சித்ரா கண்ணுல ஏற்கெனெவே கண்ணீர் தளும்பிகிட்டு இருந்தது) நாம இதுலேந்து நம்மைப்பத்தியும் மத்தவங்களைப்பத்தியும் புரிஞ்சு கொண்டது என்ன? வேற எந்த மாதிரி செஞ்சு இருந்தா இந்த நோக்கம் - தாக்கம் பொருத்தமா இருந்திருக்கும்? இந்த கேள்விக்கு விடை தெரியலைன்னா வேற யாரான அனுபவஸ்தர்கிட்ட கேளுங்க.

சித்ரா சமாசாரத்தில அவங்க ஏற்கெனெவே குற்ற உணர்ச்சியோட இருந்தாங்க. ஜோக்கடிக்கற நேரம் அது இல்லை. கொஞ்சம் கவனமா இருங்கன்னு சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்கு போயிருக்கலாம்.

மாமியார்கள் ‘இந்த வேலையை இப்படி செஞ்சா இன்ன லாபம்’ ந்னு சொன்னா மாட்டுப்பெண் எடுத்துக்கிற விதமே வேறயா இருக்கும்! ஆனா நிறைய மாமியார்களுக்கு இது தெரியறதில்லையே!

Saturday 11 February 2017

14. உங்க விமர்சனத்தை நேரடியாகவும் ஆக்க பூர்வமாகவும் செய்யுங்க!

14. உங்க விமர்சனத்தை நேரடியாகவும் ஆக்க பூர்வமாகவும் செய்யுங்க!
உங்க செயல்களுக்கு கிடைச்ச விமர்சனங்களை நினைவிருக்கா? அதெல்லாம் எங்க மறக்க முடியும்ன்னு கோபப்படறீங்களா? அமைதி, அமைதி!

அதெல்லாம் எப்பவும் நாம விரும்பறா மாதிரி இருந்திருக்காதுதான். ஆனா நம்ம செயல்களை அவை கொஞ்சமாவது மாத்தியிருக்கும். சமூக வலத்தளங்கள் ‘வளர்ந்து’விட்ட இந்த காலத்தில விமர்சனம் செய்ய தகுதின்னு ஒண்ணு தேவையில்லைதான். வெட்டியா பொழுது போக்கற ஆசாமிக்கு ஏதானாலும் சரி, கருத்து சொல்ல ரெடியா இருப்பாரு. அது விஷயமில்லை இங்கே.

இங்க விஷயம் நாம முன் வைக்கிற விமர்சனம். இதுக்கு உசாநு வோட நாலு திறன்களும் தேவையா இருக்கு. அப்பத்தான் அது நல்ல விமர்சனமா இருக்கும்; நல்ல உறவை உருவாக்கும். முதல்ல இந்த விமர்சனத்தை முன் வைக்கறதுக்கு நம்ம உணர்வு எப்படி இருக்கு? ஒண்ணும் பிரச்சினை இல்லையே? இல்லை ஒரு வேளை ‘என்னவோ அது கொஞ்சம் சங்கடமா இருக்கு’ நு தோணுதா? ஆமாம்னா ஏன்? இல்லையா? ரைட்!

அடுத்து விமர்சனத்தப்ப நாம வெளிப்படுத்த வேண்டிய உணர்வு என்ன? மத்தவங்க உணர்வை புண் படுத்தாம எவ்வளவு தூரம் போகலாம்?

விமர்சனம் யாரைக்குறிச்சு வைக்கிறோமோ அவங்களைப்பத்தி யோசிங்க. அவங்களுக்கு நாம வைக்கிற விமர்சனம் தெளிவாகவும், நேரடியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மரியாதையோடவும் இருக்கறதா தோணனும். நல்லா நினைவிருக்கட்டும். நம்மோட விமர்சனம் அந்த நபரை குறிச்சது இல்லே. அவரோட செயலையோ எண்ணத்தையோ குறிச்சது.

நல்ல விமர்சனத்துல இரண்டு பகுதிகள். ஒண்ணு நம்ம கருத்தை பகிர்ந்து கொள்வது. இரண்டாவது மாறுவதற்கு தீர்வுகள்.

எல்லா விமர்சனங்களும் தேன்ல குழைச்சு கொடுக்கணும்ன்னு இல்லை. சிலருக்கு நேரடியா சொல்லறதே பிடிக்கலாம். சிலருக்கு பூடகமா சொன்னா புரியாது.

உதாரணமா பாருங்களேன். ‘நீங்க இப்படி தப்பு பண்ணறீங்க’ ன்னு சொன்னா பலருக்கும் பிடிக்காது. அதே ‘பல சமயம் நாம இப்படி தப்பு செய்யறோம்’ ன்னு சொல்லிப்பாருங்க!
ரொம்ப சென்சிடிவா இருக்கறவங்களுக்கு ‘என் ரிப்போர்ட் படு மோசம்’ ந்னு சொல்லாம ‘இன்னும் நல்லா இருக்கலாம். எப்படின்னு நாம கலந்து பேசலாமா?’ ந்னு சொன்னா இன்னும் நல்லது!


Friday 10 February 2017

13. ஏன் இப்படி நடக்குது?

13. ஏன் இப்படி நடக்குது?
கண்ணைக்கட்டி காட்டில விட்டாப்போல ந்னு ஒரு சொலவடை உண்டு. ஏற்கெனெவே காட்டில திக்கு திசை தெரியாம அல்லாடணும். அதுல கண்களையும் கட்டி விட்டுட்டா என்ன கதி? நிறைய பயம், மன உளைச்சல், பதட்டம், இன்ன பிற.

முன்னே பின்னே தெரியாத இடத்துக்கு பயணம் செய்து இரவு நேரம் போய் சேர்ந்தா அப்படித்தான் இருக்கும். பெரிய நகரமா இருந்துட்டா பரவாயில்லே. ஒரு சின்ன க்ராமமா இருந்தா? அதுவும் பவர் கட் சமயத்துல? என்னென்னவோ தெரியாத சத்தம் எல்லாம் கேக்கும்! என்னதான் நம்மை வரவேத்தவர் நல்ல மெத்தை தலைகாணி கொடுத்திருந்தாலும் லேசுல தூக்கம் வராது!

அதுவே காலை பொழுது விடிஞ்ச பிறகு… அட! க்ராமம் இவ்வளோ ரம்மியமா இருக்கே! சிலு சிலுன்னு ஓடற ஓடை, தோப்புகள், பச்சை பசேல் வயல்கள்….. நேத்து இங்கேயா பயந்துக்கொண்டு இருந்தோம்? ஏன்?
ஒரே வித்தியாசம் - வெளிச்சம்.

இரவு வெளிச்சம் இல்லாம புரியாத பலதும் பயமுறுத்தியது. இப்ப என்ன இருக்கு என்ன நடக்குதுன்னு தெரியுது, அதனால பயமில்லை. எப்பவுமே அறிவுக்கு எட்டாதது பயமுறுத்தும்.

ஒத்தருக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்லை. என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் செஞ்சு நிறைய ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை பாத்து…. குடும்ப டாக்டர் ரொம்ப கவலையா இருக்கார். கடைசில ஒரு ரிப்போர்ட் வருது. அதை பாத்துட்டு அப்பாடா! என்கிறார். என்னன்னு கேட்டா ஒண்ணுமில்லே, டிபிதான்கறார். என்ன டிபியான்னு அதிர்ச்சி அடைஞ்சா, “ஆமாம். இது இவ்வளோ நாள் என்னன்னு தெரியாம இருந்தது. இப்ப தெரிஞ்சுடுத்து. அதனால சரியான சிகிச்சை கொடுக்கலாம்.உடம்பு சரியாயிடும்!” என்கறார்!

என்ன பெரிய பிரச்சினையானாலும் அது என்னன்னு பிடிபடாத வரைதான் பிரச்சினை. அது பிடி பட்ட பிறகு அதை கையாள வழிகள் இருக்கும்.

நீங்க ஒரு கம்பனி நடத்தறீங்கன்னா அப்பப்ப சில முடிவுகள் எடுப்பீங்க. முடிவு எடுத்தா மட்டும் போறாது. சில சமயம் நீங்க எடுக்கற முடிவுகள் ஏன்னும் சிலருக்கு தெரியணும். எல்லா முடிவும் எல்லாருக்கும் எப்பவும் தெரியணும்னு இல்லை. யார் யாருக்கு எப்போ தெரியணுமோ அப்ப தெரியணும்.

உதாரணமா உங்க தொழிற்சாலையில ஒரு குறிப்பிட்ட சமாசாரத்தை தயார் செய்யறதை நிறுத்தப்போறீங்கன்னு வெச்சுக்கலாம். அது சரியா விற்கலை. அல்லது வேற ஒண்ணு அதை மார்கெட்ல இருந்து தள்ளப்போகுதுன்னு தகவல் கிடைச்சு இருக்கு. ஏதோ ஒரு காரணம். இதை சிலருக்காவது சொல்லி வைக்கணும் இல்லையா? இல்லைன்னா அதோட மூலப்பொருளை பர்சேஸ் டிபார்ட்மெண்ட் வாங்கிகிட்டே இருக்கும். சேல்ஸ் மக்கள் ஆர்டர் புக் பண்ணிகிட்டே இருக்கலாம். மெய்ண்டெனஸ் மக்கள் ஓரங்கட்ட போற/ விற்கப்போற மெஷினை மாஞ்சு மாஞ்சு பழுது பாத்துகிட்டு இருப்பாங்க. அனாவசியமான பொருட்களை வாங்கறதை தவிர்க்க, உற்பத்தி செய்யபோறதில்லை என்கிற பொருட்களை சப்ளை செய்யறதா ஒப்பந்தம் செய்யாம இருக்க, இதுக்கா ராப்பகலா இந்த மெஷினை சரி செஞ்சேன்னு பொறியாளர்கள் புலம்பாம இருக்க….. இவங்க எல்லாரையும் கூப்பிட்டு “தோ பாருங்க. இன்ன காரணத்துக்காக இத்தனாம் தேதிலேந்து இன்ன பொருளை உற்பத்தி செய்யறதை நிறுத்தப்போறோம்!” ந்னு சொல்லிடலாம். ஒவ்வொருத்தரும் இதனால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படலாம். அவங்களோட கஷ்டம் என்ன என்கிறது அவங்களோட நிலையில இருந்து பார்த்தாத்தானே தெரியும். உங்க சமூக விழிப்புணர்வை இதுக்கு செயலுக்கு கொண்டு வந்து ஆராய்ஞ்சு அதுக்கு தக்க நடவடிக்கை எடுக்கணும்.
எல்லாருக்கும் இனிமே டிடிஎஸ் பிடிக்கச்சொல்லி அரசு உத்தரவு; இனிமே எல்லாருக்கும் வங்கி பரிவர்த்தனை மூலம்தான் சம்பளம் கொடுக்கணும்ன்னு அரசு உத்தரவு - இந்த ரீதியில எடுக்கற முடிவுகளைப்பத்தி தெரிய வேண்டியவங்க எல்லாருக்கும் சொல்லிட்டா நல்லது. யாரும் அதிர்ச்சி அடைய மாட்டாங்க. அவங்களுக்கு தெரிவிக்காம அவங்களை பாதிக்கக்கூடிய விஷயம் எதுவும் நடக்காது என்கிறது அவங்களுக்கு பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரும். அது அவங்களுக்கு துன்பம் கொடுக்கும்ன்னாக்கூட அதை ஒத்துப்பாங்க.

சமீபத்தில 500, 1000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைக்கு விதிச்ச கட்டுப்பாடு ஒரு நல்ல உதாரணம். இந்த முடிவால எல்லாருமே கொஞ்சமாவது கஷ்டப்பட்டாங்க. இருந்தாலும் அரசுக்கு எதிரா வழக்கம் போல சத்தம் போடறவங்களைத்தவிர பெரும்பாலும் யாரும் எதிர்ப்பு காட்டலை. இதே மாதிரி முடிவை வெனிசுலாவில திடுதிப்புன்னு அறிவிச்சதுல மக்கள் புரட்சி எல்லாம் ஏற்பட்டு முடிவை வாபஸ் வாங்க வேண்டி இருந்தது.

ஒரு நிறுவனத்தில வேலை பார்க்கிறவங்களை சொன்னதை செய்; கேள்வி கேக்காதே என்கிற முறையில் அணுகாம அவங்களுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுக்கறதை அவங்க வரவேற்பாங்க.

நாம் ஒரு வேளை முந்தின வேலையில் சட்டு புட்டுன்னு திடீர் முடிவுகள் எல்லாம் எடுத்து மேலாள வேண்டியதா இருந்திருக்கலாம். அப்ப அது வெற்றியடைஞ்சு இருக்கலாம். ஆனா இப்பவும் அதே மாதிரி மேலாண்மை பொருந்துமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
முன்னே எடுத்த முடிவுகள் ஒரு ரிஃப்லக்ஸ்ல எடுத்து இருக்கலாம். இப்ப அதயே யோசிச்சு புத்தி பூர்வமா எடுக்க முயற்சி செய்யுங்க. கொஞ்சம் இடைவெளி கொடுத்து யோசிக்க நாம இன்னும் கொஞ்ச நாட்களில எடுக்க வேண்டிய முடிவுகள் இப்பவே புரிய ஆரம்பிக்கும். யார் யார் பாதிக்கப்படுவார்கள்? யார் யார் வேலை எப்படி எப்படி மாறணும்? அதுக்கு இப்பவே என்ன செய்யணும். அவங்களுக்கு இதை எப்ப தெரிவிக்கணும்? எவ்வளவு தெரிவிக்கணும்? அதுக்குன்னு தனியா ஒரு மீட்டிங் கூப்பிட்டு சொல்லணுமா? இல்லை ஒரு சர்குலர் போதுமா?


வேலை செய்யறவங்களுக்கு தன்னை எவ்வளவு தூரம் நம்பறாங்க, என்ன எதிர்பார்க்கிறாங்கன்னு புரிஞ்சா அவங்களோட வேலை இன்னும் சிறப்பா இருக்கும்.