Friday 18 November 2016

உங்களை நீங்களே கழுகு மாதிரி கவனியுங்க!

உங்களை நீங்களே கழுகு மாதிரி கவனியுங்க!
நாம தெருவில நடந்து போறோம். நம் பார்வையில என்ன இருக்கு? இந்த தெரு, அதுவும் நம்ம முன்னாடி என்ன இருக்குன்னு மட்டும். இல்லையா?

வானத்தில மிக உயரத்தில மிதக்கிற கழுகை பாத்தி இருக்கீங்களா? கீழே நடக்கறதுகளில இருந்து அது விலகி இருக்கு. ரொம்பவே! ஆனா நாம நடந்து போறதை உன்னிப்பா பார்க்குது. நமக்கு எந்தெந்த வழிகள் எல்லாம் இருக்கு? ஆனா நாம போகிற வழி என்ன? நமக்கு பின்னால செயின். கைப்பை திருடன் எவனாவது வரானா, மோதறா மாதிரி பைக் எதாவது வருதா? இதெல்லாம் வானத்தில விலகி மிதக்கிற கழுக்குக்கு நல்லா தெரியும்; தெருவில நடக்கிற நமக்குத்தெரியாது! சாதாரணமா நம்ம பார்வை குறுகினது.  வண்டிக்குதிரைக்கு ப்ளைண்ட்ஸ் போட்ட மாதிரி எதிரே இருக்கிறது மட்டுமே தெரியும். நம்ம வாழ்க்கையை இந்த கழுகு போல விலகி இருந்து பார்க்க முடிஞ்சா…. எவ்வளவு விஷயங்கள் புரியும்! உணர்ச்சிகளில இருந்து விடுபட்டு பாசிடிவ்வா செயல்கள் நடக்க என்ன செய்யணும்ன்னு திட்டமிட்டு செயல்படுவோம் இல்லையா?

நாம கழுகு இல்லைத்தான். இருந்தாலும் நம்ம நடத்தையை கொஞ்சமாவது விலகி நின்னு கவனிக்கறது நம் செயல்களை செம்மைப்படுத்தும். வாழ்க்கை என்கிற ட்ராமா விரியும் போது நம் உணர்ச்சிகள், எண்ணங்கள், நடத்தை எல்லாத்தையும் விலகி நின்னு கவனிக்க ஆரம்பிங்க.

மொத்தத்தில நம்ம இலக்கு மனசால எதிர்வினை செய்யாம புத்தி பூர்வமா நிலையை அலசி இருக்கிற வழிகளை யோசிச்சு செய்வது.

ஒரு உதாரணம் பாத்தா புரியும். நீங்க ஒரு அம்மா. ஐடில வேலை பாக்கற இள வயசு பையன் வீடு திரும்ப தாமதமாகுது. செல் போன்ல ரிங் போகுது; பதில் இல்லை. பையன் வர தேவுடு காத்துகிட்டு இருக்கீங்க. நேரம் ஆக ஆக எதுக்காக நம்ம கவலை ஆரம்பிச்சதோ அது காணாமப்போகும், அவனுக்கு என்ன ஆயிருக்குமே, பாதுகாப்பா இருக்கானா இல்லையான்னு கவலையோட ஆரம்பிச்ச நம் உணர்ச்சிகள் ’இப்ப நாம் சொல்லறதை கேக்கறதில்லே, வீட்டுக்கு ஒரு ஃபோன் போட்டு வர லேட்டாகும்ன்னு சொல்லக்கூடாதான்னு’ பல வித கோபங்களை உருவாக்கி இருக்கும். ஒரு வழியா ராத்திரி பத்தரைக்கு வரான். வந்த உடனே என்ன நடக்கும்? ஏண்டா லேட் ந்னு கோபத்தோட கேப்போம். உண்மையான பதிலா வரப்போகுது? ஏதோ நொண்டி சமாதானம் வரும். இல்லைன்னா ’உழைச்சுட்டு பசியோட லேட்டா வரேன். சாப்படியான்னு கேக்காம நீ பாட்டுக்கு திட்டறே?’ ந்னு எதிர் தாக்குதல் வரும். அப்புறம் ரண களம்தான்.

இதுவே விலகி நின்னு பார்க்க முடிஞ்சு இருந்தா…. பையன் திரும்பி வந்ததும் நம்ம கோபம் மேலெழும்ன்னு தெரியும். திட்ட ஆரம்பிச்சா அது நாம் எதிர் பார்க்கிற பொறுப்பை கொண்டு வராதுன்னு தெரியும். என்ன செய்யலாம்ன்னு திட்டமிடுவோம். வந்ததும் மௌனமா தட்டை போட்டு சோறு போட ஆரம்பிச்சா முதல் அதிர்ச்சி! என்னடா திட்டுவான்னு பாத்தா அம்மா திட்டவே இல்லையே? சாப்பிட்டு முடிச்சப்பறம் மெதுவா “ ரொம்ப நேரமாயிடுத்தா, ரொம்ப கவலையாப்போச்சுடா! என்னா யிருக்குமோ ஏது ஆயிருக்குமோன்னு… செல்போன்ல கூப்டுப்பாத்தா பிக் பண்ணவே இல்ல. நிஜமா பயந்து போயிட்டேன்” ந்னு சொல்ல,
இப்படி பதில் வரலாம். “ரொம்ப சாரிம்மா. வேலை இன்னைக்கு கொஞ்சம் கடுமை. கிளம்பவே லேட் ஆயிடுத்து. இன்னைக்கு பயங்கர ட்ராஃபிக். போன் அடிச்சது காதில விழலை. கிளம்பறதுக்கு முன்னே ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம். என்னமோ தோணலை. இனிமே இப்படி நடந்துக்காம பாத்துக்கறேன்.” சுபம் சுபம் சுபம்!


விலகி நின்னு பார்க்கிறதாலே நம் முதல் விருப்பமான பொறுப்பு வரணும் என்கிறதுக்கு தேவையானதை செஞ்சுட்டோம். கோபம் வராம இருக்க முதலிலேயே நிதானத்துக்கு வந்துட்டோம். எப்படி எல்லாம் நடந்துக்கலாம்ன்னு திட்டமிட முடிஞ்சது. நம்ம கவலையை தெளிவா சொன்னோம். சண்டை போடாததில நம்மோட ஆரோக்கியம் பாதிக்கப்படலை. உறவு பாதிக்கப்படலை. வேற என்ன வேணும்?

No comments:

Post a Comment